பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: மே 19-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
சென்னை: பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in www.tndge1.tn.nic.in www.tndge2.tn.nic.in ஆகிய இணைதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
COMMENTS